மாந்திரீக தடை சட்டத்தை அமல்படுத்த ஐகோர்ட்டில் கேரள அரசு மறுப்பு

கொச்சி : ‘கேரளாவில், மாந்திரீகம், பில்லி, சூனியம் போன்ற நடவடிக்கைகளை தடைசெய்யும் சட்டத்தை நடைமுறைப்படுத்த போவதில்லை’ என, உயர் நீதிமன்றத்தில் கேரள அரசு தெரிவித்துள்ளது.

கேரளாவில், மாந்திரீகம், பில்லி, சூனியம் போன்ற நடவடிக்கைகளால் தொடர் உயிர் இழப்புகள் ஏற்பட்டு வருகின்றன.

இதை தடுக்கும் நோக்கில், ‘மாந்திரீகம், பில்லி, சூனியம் தடுப்பு மற்றும் ஒழிப்பு மசோதா’வை, சட்ட சீர்திருத்த கமிஷன், 2022ல் பரிந்துரைத்தது.

இந்த மசோதாவை நிறைவேற்ற முடியாது என கேரள அரசு பின்வாங்கியது.

இது தொடர்பாக, யுக்திவாடி சங்கம் கேரள உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தது.

இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், மசோதாவை நிறைவேற்ற காலதாமதம் செய்வது ஏன்? என்பது குறித்து பதில் அளிக்கும்படி கேரள அரசுக்கு உத்தரவிட்டது.

இவ்வழக்கின் விசாரணை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி நிதின் ஜம்தார் தலைமையிலான அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தபோது, கேரள அரசு பதில் மனு தாக்கல் செய்தது.

இதில், ‘கடந்த, 2023, ஜூலை 5ல் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த மசோதாவை நிறைவேற்ற வேண்டாம் என முடிவு செய்யப்பட்டது.
‘சட்டசபையில் ஒரு சட்டத்தை இயற்றும்படி கட்டாயப்படுத்தும் அதிகாரம், நீதிமன்றத்திற்கு கிடையாது. எனவே, இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்’ எனக் குறிப்பிட்டுள்ளது.

சட்டத்தை இயற்றாமல், மாந்திரீகம், பில்லி, சூனியம் போன்றவற்றை எவ்வாறு அரசு கட்டுப்படுத்தும்? அதுபற்றி, பதில் மனுவில் அரசு குறிப்பிடவில்லை.

எனவே, இதுபோன்ற மூடநம்பிக்கைகளை கட்டுப்படுத்த என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்கப்போகிறது என்பதை மூன்று வாரத்திற்குள் நீதிமன்றத்தில் கேரள அரசு தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *