மின்சாரக் கட்டணத்தை 15 சதவீதத்தால் அதிகரிப்பது மக்கள் வழங்கிய ஆணையை காட்டிக் கொடுக்கும் செயலாகும். இது மக்கள் ஆணைக்கு இழைக்கப்படும் துரோகமுமாகும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
விசேட அறிக்கையொன்றை வெளியிட்டு எதிர்க்கட்சி தலைவர் இதனைத் தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது :
மின்சாரக் கட்டணத்தை 15 சதவீதத்தால் அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இலங்கை மின்சார சபையும், அரசாங்கமும் முன்வைத்த முன்மொழிவின் அடிப்படையில் பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு இந்த முடிவை எடுத்துள்ளது. இந்த மின்சாரக் கட்டண அதிகரிப்பு மக்கள் ஆணையை மீறும் செயலாகும். இது இந்நாட்டு மக்களை ஏமாற்றும் நடவடிக்கையாகும்.
ஜனாதிபதி தேர்தலின் போது, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மின்சாரக் கட்டணத்தை 9000 ரூபாவிலிருந்து 6000 ஆகவும், 3000 ரூபாவிலிருந்து 2000 ரூபாவாகவும் குறைப்போம் என்றார். மின்சார கட்டணத்தை 33 சதவீதத்தால் குறைப்போம் என்றும் எல்லா மேடைகளிலும் வாக்குறுதிகளை வழங்கினார்.
பின்னர், பொதுத் தேர்தலில் அக்கட்சி வெற்றி ஈட்டி 159 ஆசனங்களை தனதாக்கிய சந்தர்ப்பத்திலும் கூட மின்சாரக் கட்டணத்தை 33 சதவீதத்தால் குறைத்திருக்க வேண்டும். ஆனால் அதற்கான எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
நாட்டு மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை அப்பட்டமாக மீறி, ஜனாதிபதியே தான் வெளியிட்ட அறிக்கைகளை பொய்களாக மாற்றும் வகையில், மின்சாரக் கட்டணத்தை 15 சதவீதத்தால் அதிகரிக்க தற்போது இந்த அரசாங்கம் எடுத்த நடவடிக்கை, இந்த நாட்டின் மின்சார நுகர்வோரின் உரிமைகளை அப்பட்டமாக மீறும் செயலாகும்.
இந்த அரசாங்கம் மக்கள் ஆணையை மீறி செயல்பட்டு வருகிறது. மக்கள் ஆணையை காட்டிக் கொடுத்து பொதுமக்களின் கருத்தை கிடப்பில் போட்டுள்ளது.
தற்போதைய அரசாங்கம் பொதுமக்களுக்கு வழங்கிய அனைத்து வாக்குறுதிகளையும் பொய்யாக்கி, மின்சார கட்டணத்தை 15 சதவீதத்தால் அதிகரித்துள்ளது. அரசாங்கம் எடுத்துள்எ இந்த நடவடிக்கையால் ஏழைகள், சாதாரண மக்கள், உழைக்கும் மக்கள், தொழில்முனைவோர்கள் மற்றும் சுற்றுலாத் துறையில் ஈடுபட்டு வருவோர் கடுமையான சிக்கலுக்குள் தள்ளப்படுவர்.
எனவே, மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்றி, வழங்கப்பட்ட மக்கள் ஆணையை காட்டிக் கொடுக்க இடமளிக்க வேண்டாம் என கேட்டுக்கொள்கிறோம் என்றார்.
Leave a Reply